Wednesday, June 11, 2014

மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி நான்.
ஏழைப் பங்காளன்; பங்காளி அல்ல.
கௌரவம் காப்பேன்.
கௌரவர்களில் ஒருவனல்ல.

என்னது.. லஞ்சமா? என்னது.. கொஞ்சமா?
ஏன்.. எனக்கென்ன பஞ்சமா?
நீரோடி மீனோடிய வயலினில் ஏரோட்டி,
வீதியெலாம் தேரோட்டிய
வீர மண்ணின் மைந்தன் நான்;
ஈர மண்ணின் இளவல் நான்.
பல தலைமுறைக்குச் சோறிட நெல்லுண்டு
சில தலை நிழல் சாய்ந்திட வீடுண்டு
அடுத்தவன் இலையில் கைவைக்க
நான் என்ன பிச்சைக்காரனா?

என்னது? பொண்டாட்டி கேட்பாளா?
பாசமாய்ப் புல்லறுத்துப் பாட்டி வளர்த்த பசுவின்
பேத்தி ஈன்ற பசு, பத்து குடம் பால் கறக்க
என் மனைவியின் பட்டு விரல் படுமா
அவள் சுட்டுவிரல் தொடுமா,
ஊரான் வீட்டு நெய்?

என்னது? பிள்ளைக்குச் சேர்க்கவா?
ஏன்.. என் சிங்கத்துக்குக்
கையில்லையா? காலில்லையா?
தினவெடுத்த தோளில்லையா?
அவன் ஒரு ஆளில்லையா?
அப்பனுக்குப் பிள்ளையிடுவதா-
பிள்ளைக்கு அப்பனிடுவதா வாய்க்கரிசி?

No comments: