Wednesday, June 11, 2014

தாரை தப்பட்டை

இசைஞானி இளையராஜா அவர்களின் 1000-ஆவது படமான "தாரை தப்பட்டை" படத்திற்கு நான் எழுதிய Title Song-ஐ (கற்பனை தாங்க!) உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்
---------------------------------------------------------

தாரை தப்பட்டை ஆதியில் தமிழனின் நாதமடா
தாரை தப்பட்டை ஜாதிகள் மீறிய வேதமடா
தாரையும் இழுத்திடும் மூச்சானதோ
பறைதான் இதயத்தின் பேச்சானதோ - அட
ஊர்விட்டுப் போனாலும்
உடல் கொண்டு போகின்ற
உயிரான இசைஎன்றும்
உயர்வான இசையன்றோ? கேளு – ( தாரை தப்பட்டை )

பரமாடும் நட ராஜன் ராஜன் - அழகு
அரவாடும் முடி சூடும் ராஜன் - அவனின்
சிரமீது நுரை பொங்கி
கரை மீறி நதி ஆட ஆட- அதனில்
படகாக பிறையாட ஆட - இடது
பதம் தூக்கி நடராஜன் ஆட
அட ஆடட்டும் ஆடட்டும் எல்லாம்
என ஆடிடும் அரைபாகம் மாதன்
அந்த விடைபாகன் தடக்கையில்
அடிக்கின்ற உடுக்கையொலி
தடக் என்று தடக் என்று கேட்கும்
அந்த இசை இந்தப் பறையினிலும் கேட்கும்….. கேளு – ( தாரை தப்பட்டை )

மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி நான்.
ஏழைப் பங்காளன்; பங்காளி அல்ல.
கௌரவம் காப்பேன்.
கௌரவர்களில் ஒருவனல்ல.

என்னது.. லஞ்சமா? என்னது.. கொஞ்சமா?
ஏன்.. எனக்கென்ன பஞ்சமா?
நீரோடி மீனோடிய வயலினில் ஏரோட்டி,
வீதியெலாம் தேரோட்டிய
வீர மண்ணின் மைந்தன் நான்;
ஈர மண்ணின் இளவல் நான்.
பல தலைமுறைக்குச் சோறிட நெல்லுண்டு
சில தலை நிழல் சாய்ந்திட வீடுண்டு
அடுத்தவன் இலையில் கைவைக்க
நான் என்ன பிச்சைக்காரனா?

என்னது? பொண்டாட்டி கேட்பாளா?
பாசமாய்ப் புல்லறுத்துப் பாட்டி வளர்த்த பசுவின்
பேத்தி ஈன்ற பசு, பத்து குடம் பால் கறக்க
என் மனைவியின் பட்டு விரல் படுமா
அவள் சுட்டுவிரல் தொடுமா,
ஊரான் வீட்டு நெய்?

என்னது? பிள்ளைக்குச் சேர்க்கவா?
ஏன்.. என் சிங்கத்துக்குக்
கையில்லையா? காலில்லையா?
தினவெடுத்த தோளில்லையா?
அவன் ஒரு ஆளில்லையா?
அப்பனுக்குப் பிள்ளையிடுவதா-
பிள்ளைக்கு அப்பனிடுவதா வாய்க்கரிசி?