Thursday, May 15, 2014

பெண் பார்க்கும் படலம்

முதல் பார்வையிலேயே
ஒரு பொறி தோன்றியது.
பற்றிக்கொண்ட பார்வைகள்
அடுத்தடுத்துப் பார்க்கையில்
ஆர்க் வெல்டிங் அடித்து
ஒட்டிக்கொண்டன இரும்புத் துண்டுகள்.
வாய்மொழிக்கு முன்பாக
உடல்மொழியில் திருமண உறுதி செய்துவிட்டு
இழுத்துவிட்ட இருவரின் மூச்சிலும்
நாதஸ்வர ஆலாபனை ஆரம்பித்துவிட்டது.
மணநாள் நினைவுகளில்
மேளதாளம் கொட்டி தாலி கட்டுமுன்னே
கோலம்போட்ட உன் கால்விரலில்
கண்களால் மெட்டியணிவித்துவிட்டுக்
காத்திருந்தேன்.
நீ காபி கொண்டுவருகையில்
கண்டேன் உன் கையில் பால்செம்பு.

Saturday, May 10, 2014

மல்லி வைத்து வந்துவிடு

செடியில் கிள்ளித்தான் வைத்தாயோ?
என் அத்தை
சொல்லித்தான் வைத்தாயோ?
என்னத்தைச் சொல்வது..
நீ அள்ளிவைத்த கூந்தலில்
ஆடிவரும் மல்லிகையை?

பள்ளிக்கூட பெஞ்சின் மேல்
நீ பஞ்சு போல் உட்கார
கட்டடத்துள் வட்டமிட்டு
பட்டம்போல பறக்குதடி
நீ கட்டி வந்த மல்லி வாசம்.

பள்ளிச் சீருடையா இல்லை
மல்லிக்கு மேட்சிங்கா
இந்த வெள்ளை சட்டை?
என்னைக் கட்டி வெச்சாலும்
கண்ணக் கட்ட முடியலையே..
திகட்டத் திகட்டப் பார்க்கிறேன்
தின்னாமலே தித்திக்கும்
வெல்லக் கட்டி உன்னையே...

நல்ல நாளைப் பார்த்துவிட்டேன்
நானும் உன்னைக் கட்டிவிட…
கடைசி பரீட்சை முடியும் அந்த
மாலையில் தான் ரிசப்சன்.
மண்டபத்துக்கு மறக்காமல்
மல்லி வைத்து வந்துவிடு.

அம்மா...

உயரத்தைப் பொருட்படுத்தாது
உவப்புடன் கழுத்தை நீட்டி
குடும்பம் எனும் இரட்டை மாட்டு வண்டியில்
அப்பாவின் இழுப்புக்கு மூச்சிரைக்க ஓடி
சில நேரம் முரண்டுபிடித்து
வண்டியைச் சரியான பாதையில் திருப்பி
உன் பிள்ளைகள் நாங்களும்
ஏதேனும் ஒருவிதமாய் உருப்பட
ஓடி ஓடி இன்னும் ஓயாத அன்னையே...
வயதான காலத்திலும்
சுமையான உந்தன் கழுத்து பாரத்தைப்
புனிதமென்று போற்றிப் பொட்டிட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்ள
பாட்டனிடம் பாடாய்ப் பட்ட
பாட்டியிடமா கற்றாய்?
பைத்தியம் நீ.