Thursday, May 26, 2011

அன்பருள் அமர்ந்தான்

கூப்பிய கரங்கள் கோபுரமாக
கும்பிடும் மனமே கோயிலுமாக
கூப்பிடும் குரலும் குறையின்றிக் கேட்க
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே
ஐங்கரன் இளையோன் பன்னிரு கரனே

( உள்ளத்தில் கோயில் கொண்ட
அழகு முருகன் பாடல் பாடி
தினமும் அவனின் பாதம் பணிவோம்
வேலாயுதா முருகா வினை தீர்க்கும் திருமுருகா )

காதினில் என்றும் கனிமொழி ஒலிக்க
நாவினில் என்றும் நல்லதே பிறக்க
தாயினைப் போல பரிந்துணவூட்ட
நோயினை நீக்கும் மருந்தொன்று காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

நானிலம் எங்கும் நன்மைகள் கூட்ட
மானிட தருமங்கள் தடையின்றி ஆற்ற
மாலையில் நிலவினில் விழிமலர் மூட
காலையில் கதிரொளி கண்களில் காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

 சாற்றிய மாலைகள் மார்பினில் ஆட
போற்றிடும் தாயவர் இருபுறம் கூட
வேலும் மயிலும் விரைந்திடத் துடிக்க
சேவலின் கொடியுடன் செங்கோல் நடத்த
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

No comments: