Wednesday, March 9, 2011

மேதினியின் மேய்ப்பர்

மேதினியின் மேய்ப்பரே
மெய்ப்பொருள் நீரே
பாமரரின் பிதாவும் நீரே
சோதரரின் சகாயம் நீரே
ஊழியர்க்கோர் உபாயம் நீரே
ஊழ்வினைக்கோர் அபாயம் நீரே (மேதினியின்)

விரலில் இயங்கும் விசையாவீர்
குரலில் மயங்கும் இசையாவீர்
திசையின் இருளில் ஒளியாவீர்
அசையும் பொருளில்  உயிராவீர்
விசையும் இசையும் தேய்ந்தாலும்
ஒளியும் உயிரும் ஓய்ந்தாலும்
ஜெபமே என்றும் ஓயாது எம்
ஜெபமே என்றும் ஓயாது (மேதினியின்)

முள்ளின் மகுடம் அணிந்தீரே
செந்நீர் மழையில் நனைந்தீரே
சிலுவை பளுவைச் சுமந்தீரே
சிதைவும் வதையும் சகித்தீரே
செந்நீர் மண்ணில் விழுந்தாலும்
கண்ணீர் விழியில் வழியாமல்
கருணை மழையைப் பொழிந்தீரே என்றும்
கருணை மழையைப் பொழிந்தீரே (மேதினியின்)
(சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நண்பன் சேவியர் நினைவில் எழுதிய இறை துதி)

1 comment:

ஸ்ரீராம். said...

எங்கள் அனுதாபங்கள்.

நல்ல கவிதாஞ்சலி.